துபாய்: ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிலிருந்து டெல்லிக்கு நேற்று ஏர் இந்தியா ஒன்று புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் ஆட்டோ பைலட் தொழில் நுட்பம் இயங்காமல் போனது. இந்த கோளாறை உடனடியாக சரி செய்ய முடியாததால் விமானம் டெல்லி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து விமானம் டெல்லிக்கு செல்லாமல் துபாய் விமான நிலையத்தில் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். பின்னர் உரிய பரிசோதனைகளுக்கு பின்னர் விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்டது. அதன் பிறகு பயணிகள் அனைவரும் அதே விமானத்தில் டில்லி புறப்பட்டனர்.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவித்துள்ளதாவது; "அக்.9ம் தேதி வியன்னாவில் இருந்து புதுடில்லிக்கு Al 164 என்ற ட்ரீம் லைனர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, சந்தேகத்துக்குரிய தொழில் நுட்ப கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அந்த விமானம் துபாய்க்கு திருப்பி விடப்பட்டது. துபாயில் விமானம் மிகுந்த பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது. அனைத்து சோதனைகளும் நடத்தப்பட்டது. விமானம் தாமதம் குறித்து பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கோளாறு நீக்கப்பட்டு, பயணிகளுடன் விமானம் டெல்லிக்கு புறப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.