புதுடெல்லி: உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் ஏவுதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது. ஐஏடிடபிள்யுஎஸ் எனும் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டிஆர்டிஓ உருவாக்கி உள்ளது.
இது, விரைவாக தரையிலிருந்து வான் இலக்கை தகர்க்கும் ஏவுகணைகள், குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணைகள், உயர்சக்தி கொண்ட லேசர் ஆயுதங்கள் அமைப்பு என பல அடுக்குகளை கொண்டது. இதன் முதல் ஏவுதல் சோதனை ஒடிசா மாநில கடற்கரையில் நேற்று மதியம் நடந்தது. இதில் வான் பாதுகாப்பு அமைப்பிலிருந்து ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதாக டிஆர்டிஓ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வெற்றிகரமான சோதனை முயற்சிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் பதிவில், “ஐஏடிடபிள்யுஎஸ்சின் வெற்றிக்காக பாடுபட்ட டிஆர்டிஓ, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறைக்கு வாழ்த்துகள். இந்த தனித்துவமான ஏவுதல் சோதனை நமது நாட்டுக்கு பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை நிறுவியுள்ளது. எதிரியின் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான நமது பாதுகாப்பை இது வலுப்படுத்தப்போகிறது’’ என தெரிவித்துள்ளார்.