அதிமுக பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்த மனுவை நிராகரிக்க கோரி எடப்பாடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரியும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் அதிமுக உறுப்பினர் எனக் கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு 4வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினரே அல்ல. உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது. எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்காமல் நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தெரிவிக்கவில்லை. அதனால், இந்த வழக்கு விசாரணைக்குரியதுதான். எனவே, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.