நீலகிரி: ஆட்சிக்கு வந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த 54வது நாளான இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் மக்களிடையே உரையாற்றினார். அப்போது;
நீலகிரி மாவட்டத்தை நேசித்தவர் அம்மா. அம்மாவின் மனதில் தனி இடம் பிடித்ததுதான் நீலகிரி. அதிமுக ஆட்சியில் நீலகிரிக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.400 கோடி செலவில் அரசு மருத்துவமனையை கொண்டு வந்தவன் நான். நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீலகிரி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள இ-பாஸ் ரத்து செய்யப்படும். 10,000 கட்டடங்கள் கட்டுவதற்கான நிலுவையில் உள்ள அனுமதி வழங்கப்படும்.
அதிமுக ஆட்சியில் அரசே நிலம் வாங்கி வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்படும். அதிமுக ஆட்சி மலர்ந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். பச்சை தேயிலை தோட்ட தொழிலாளர் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணப்படும். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் குன்னூரில், மல்டி ஸ்பெஷாலிட்டி பார்க்கிங் கட்டித்தரப்படும். தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் வசிக்கும் ஈழவா தீயா சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மத்திய அரசின் OBC பட்டியல் இணைப்பு குறித்து அதிமுக ஆட்சி அமைந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.