Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக கட்சி விதிகள் திருத்ததை எதிர்த்து வழக்கு தொடர அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: அதிமுக கட்சி விதிகள் திருத்ததை எதிர்த்து வழக்கு தொடர அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் அதிமுக எம்.பி கே.சி பழனிசாமியின் மகன் சுரேன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கில் எம்.ஜி.ஆர் கொண்டுவந்த விதிகளுக்கு மாறாக விதிகளை திருத்தி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கியது செல்லாது. அதே போல் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் தன்னை தற்கால பொதுச்செயலாளர், பொதுச்செயலாளர் என்ற அறிவிப்புகள் செல்லாது. அதை தொடர்ந்து நடைபெற்ற உட்கட்சி தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரி ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவின் விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்றது. இவர்களுடைய மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை நிராகரித்த தனி நீதிபதி வேல்முருகன் அதிமுக தொண்டர்கள் வழக்கு தொடர அனுமதித்து இருவருக்கும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்திலே அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அனிதா குமார் மற்றும் செந்தில்குமார் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது சுரேன் பழனிசாமி மற்றும் ராம் குமார் ஆகியோர் அதிமுகவின் உறுப்பினர்களே இல்லை என்பதால் அதிமுக தொண்டர்கள் சார்பாக தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கட்சியில் அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்பட்டதால் வளர்ப்பிள்ளைகளுக்கு கோரிக்கைகள் காலாவதி ஆகிவிட்டது என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

கட்சியின் உறுப்பினர் தான் என்று உரிய ஆதாரங்களை நிரூபித்த பிறகே அனுமதி அளித்து தனி நீதிபதி உத்தரவிட்டார். தங்கள் வழக்கு காலாவதி ஆகவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று கொண்டு தொண்டர்கள் சார்பில் வழக்கு தொடர சுரேன் பழனிசாமி, ராம்குமார் ஆகியோருக்கு அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். தனிப்பட்டமுறையில் வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.