வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (48), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்சான்றோர் குப்பம் பகுதியில் கடந்த ஆண்டு 7 ஏக்கர் பரப்பளவிலான பகுதியில் வீட்டுமனை அமைக்க டிடிசிபி அங்கீகாரம் பெற மேல்சான்றோர்குப்பம் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி தலைவர் சிவக்குமார் (45) என்பவரை அணுகி உள்ளார்.
அதற்கு சிவக்குமார், ஊராட்சி சார்பில் டிடிசிபி தீர்மானம் நிறைவேற்றித் தர தனக்கு ரூ.12 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக்கேட்டாராம். தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி அவ்வப்போது ஊராட்சி மன்ற தலைவர் ரூ.10 லட்சம் வரை பெற்றதாகவும் கூறப்படுகிறது. மீத தொகையான ரூ.2 லட்சத்தை கொடுக்கும்படி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ஊராட்சி மன்ற தலைவர் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இதுபற்றி அவர், திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் தெரிவித்தார். அவர்களது ஆலோசனையின்படி நேற்று வாணியம்பாடி பெருமாள்பேட்டை பைபாஸ் சாலை அருகே ஊராட்சி தலைவரை வரவழைத்து ரூ.2 லட்சத்தை கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரை கைது செய்தனர்.