புதுடெல்லி: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்த நடிகை சாந்தினி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘மணிகண்டனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. கடந்த 2022ம் ஆண்டு இரண்டு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்டு தான் உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது என்று விளக்கமளித்தார்.
இதையடுத்து நடிகை சாந்தினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலியல் வழக்குகளில் சமரசம் கிடையாது. இதில் சமரசம் செய்யப்பட்டது என்று தெரிவித்தது என்பது பொய்யான தகவல். வழக்கில் உயர்நீதிமன்றம் கூறிய கருத்துக்கள் எனது கண்ணியத்திற்கு எதிரானது என்பதால் அதனை நீக்க வேண்டும் என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘சென்னை உயர்நீதிமன்றம் சமரசம் தொடர்பான உத்தரவை பிறப்பித்த போது ஏன் இதனை எதிர்த்து புகார் கொடுத்த பெண் தரப்பில் மனு தாக்கல் செய்யவில்லை.
ஆனால் தற்போது இங்கு வந்து நீதிமன்றத்தில் இருந்து சமரசம் செய்ய ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறுகிறீர்கள். இதனை கண்டிப்பாக ஏற்க முடியாது. எனவே இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம். இருப்பினும் மேற்கண்ட வழக்கை மூன்று ஆண்டுகளாக ஏன் பட்டியலிடப்படவில்லை என்பதை உச்ச நீதிமன்ற பதிவாளர் விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.