சேலம்: சேலத்தில் குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி ரூ.3 லட்சம் பறித்து சென்ற கும்பலின் தலைவனான அதிமுக நிர்வாகி உள்பட 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இனாம் கரிசல்குலம் குருசாமிபுரத்தை சேர்ந்தவர் பாதமுத்து (43). இவரது மனைவி பூண்டிமாதா. இவர்களுக்கு திருமணமாகி 23 ஆண்டுகளான நிலையிலும் குழந்தைகள் இல்லை. இதுகுறித்து பூண்டிமாதா, அவரது சித்தப்பா மகள் செல்வியிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதுபற்றி செல்வி, தனக்கு அறிமுகமான சேலத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அவர், சேலத்திற்கு வந்தால் சட்டப்படியாக குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என கூறினார்.
இதையடுத்து கடந்த 11ம் தேதி ரூ.3 லட்சத்தை ஏற்பாடு செய்து கொண்டு காரில் பாதமுத்து, அவரது மனைவி பூண்டிமாதா, இவரது தம்பி முனியப்பன், மைத்துனர் மகேஷ், தங்கை செல்வி, டிரைவர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் சேலம் வந்து லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினர். இதுபற்றி அருண்குமாரிடம் தெரிவித்துள்ளனர். உடனே தன்னை பின் ெதாடர்ந்து காரில் வருமாறு கூறிய அருண்குமார், பெரியார் பல்கலைக்கழகம் அருகில் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு பணத்தை வாங்கும்போது, திடீரென கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என கூறி, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா? என கேட்டு முனியப்பன், மகேஷ் ஆகியோரிடமிருந்து பணத்தை பறித்துக்கொண்டு, அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு சென்று விட்டனர். பின்னர் அவர்களை சீலநாயக்கன்பட்டி பகுதியில் இறக்கி விட்டு விட்டு பணத்துடன் தப்பி சென்றனர்.
இதுதொடர்பாக கருப்பூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, சேலத்தை சேர்ந்த மதுராஜ் (37), ஏசுராஜ் (27) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய நபரான அருண்(எ)அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளியான பழனிபாரதியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அருண்குமார் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படையினர் கொல்லிமலை விரைந்தனர். போலீசார் வருவதை தெரிந்து கொண்ட அருண்குமாரும், பழனிபாரதியும் மின்னல் வேகத்தில் காரில் பறந்தனர். ஆனால், 70 கிலோ மீட்டர் துரத்தியும் இருவரையும் பிடிக்க முடியவில்லை. அவர்கள் அதிமுக கொடி கட்டியிருந்த தங்கள் காரை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்நிலையில் நேற்று, சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அருண்குமாரும், பழனிபாரதியும் சரண் அடைந்தனர். இதையடுத்து இவர்களை காவலில் வைத்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் செல்வராணி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர், ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் கும்பல் தலைவனான அருண்குமார், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி இணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


