ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு..!
டெல்லி: அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முட்டாகி பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
2021-ம் ஆண்டு தலீபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றிய பிறகு முதன்முறையாக தாலிபான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி வந்துள்ள அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிற அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து அமீர்கான் முத்தாகி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்தியாவின் பல்வேறு செய்தி நிறுவனங்களின் நிருபர்கள் பங்கேற்றனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஒரு பெண் நிருபர் கூட பங்கேற்கவில்லை. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டில், விதிமுறைகளை வகுக்க, பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை திணிக்க தாலிபானுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என பெண்ணியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் காட்டமான கேள்வியெழுப்பியுள்ளனர்.