சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, 2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இன்று (15ம் தேதி) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கல்லூரியில் சேர்க்கை பெற்று பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
2025-2026ம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாண்டு சேர்க்கை பெற்ற மாணவர்கள் மற்றும் 2024-2025ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம். UMIS -University Management Information System (https://umis.tn.gov.in/) என்ற இணையதளத்தில் கல்லூரி மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.