சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத கடந்த முறையை விட இம்முறை கூடுதலாக 17% விண்ணப்பங்கள் வந்துள்ளன. டெட் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், டெட் தேர்வு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளது. நவ.15,16 தேதிகளில் நடைபெறும் டெட் தேர்வு எழுத 4.77 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஆக. 11-ம் தேதி தொடங்கி செப். 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தேர்வு எழுத 4.77 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான டெட் தேர்வை அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இத்தேர்வை எழுத விரும்புகிறவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இடைநிலை ஆசிரியர்களும், பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களும் https://trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெறும் இறுதி ஆண்டு மாணவர்கள், பி.எட். இறுதி ஆண்டு படிப்பவர்களும் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உச்ச
நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. எனவே, ஆசிரியர்கள் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக, தற்போது நடைபெற உள்ள டெட் தேர்வை எழுதுவதற்கு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் செப். 13 நிறைவு பெற்றது.
இந்நிலையில் கடந்த முறையை விட இம்முறை கூடுதலாக 17% விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த 4 முறை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளைவிட இம்முறை அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதுவரை நடந்த 6 டெட் தேர்வுகளில் 2014இல் அதிகபட்சமாக சுமார் 6.50 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.