சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ரியான் (29). இவர், சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். மது போதைக்கு அடிமையாக இருந்த ரியான், சென்னை அருகே போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று இருந்தார். பின்னர் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த, வடமதுரை பகுதியில் அமைந்துள்ள தனியார் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் கடந்த மாதம் சிகிச்சைக்காக ரியான் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ரியானுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரியானை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ரியான் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் ரியான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.