Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஷூட்டிங்குக்கு சென்ற போது ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த நடிகை: தலையில் பலத்த காயத்துடன் அட்மிட்

மும்பை: மும்பையில் படப்பிடிப்புக்குச் சென்றபோது, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த பிரபல நடிகை கரிஷ்மா சர்மா, தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா நேற்று முன்தினம் மும்பையில் உள்ள சர்ச்சுகேட் பகுதிக்கு படப்பிடிப்புக்காக புடவை அணிந்து புறநகர் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் ரயிலில் ஏறிய பிறகு, ரயில் வேகமாக நகரத் தொடங்கியுள்ளது. அப்போது, உடன் வந்த தனது தோழிகளால் ரயிலில் ஏற முடியவில்லை என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால், பதற்றத்தில் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு, ஒரு நாள் முழுவதும் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘எனது தலை வீங்கியுள்ளது. முதுகு மற்றும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறேன்’ எனக் கூறியுள்ளார். அவரது தோழி ஒருவரும், மருத்துவமனையில் இருந்து கரிஷ்மா சர்மாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ரசிகர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கோரியுள்ளார். இந்தச் சம்பவம் ரயில் பயணத்தின் பாதுகாப்பைக் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.