Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு விவகாரத்தில் சீமான் மன்னிப்பு மனுவை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீமன்றம், வழக்கை ரத்து செய்ய முடியாது என்று, அதேப்போன்று 12 வாரத்துக்குள் போலீசார் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘இந்த விவகாரத்தில் எதிர்தரப்பு மனுதாரர் ஒரு பெண் பதிக்கப்பட்டுள்ளாரே. அதற்கு மனுதாரரின் பதில் என்ன? என்று கேள்வியெழுப்பியதோடு, இதில் 12 வாரத்தில் வழக்கின் விசாரணையை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஒத்திவைத்திருந்தது. ஆனால் வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டது.

மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது நடிகை விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். அதனை நம்பி நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தது மட்டுமில்லாமல், பாலியல் பாலியல் வன்புணர்வை செய்தார்.

சீமான் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இதனை அடிப்படையாகக் கொண்டு சீமான் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் செல்வாக்கு அதிகம் உள்ளவர் என்பதால் தொடர்ச்சியாக அவதூறாக ஊடகங்களில் பேசி வருகிறார்.

இதுபோன்ற செயல்களை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இருவரும் குழந்தைகள் கிடையாது. இருப்பினும் முதலில் சீமான் தரப்பு தனது மன்னிப்பு கோரிய மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை ஏற்க மாட்டோம் ” என்றனர்.