Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கிங்டம் திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: தமிழகத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி பட விநியோக நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படம் ஜூலை 31ம் தேதி வெளியானது. தமிழகத்தில் 250 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் தமிழ் ஈழ பிரச்னை குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், முழுக்க முழுக்க கற்பனை கதையான இந்த படம், தமிழீழ பிரச்னை குறித்த உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை. முறையாக தணிக்கை சான்று பெற்று படம் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு படம் திரையிடப்படுவதை தடுக்க முடியாது.

பெருந்தொகை செலவிட்டு, படத்தை வெளியிட்டுள்ள நிலையில், உரிய பாதுகாப்பு வழங்காவிட்டால் வினியோக நிறுவனமான தங்களுக்கு மட்டுமல்லாமல் திரையரங்குகளுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படும். படம் தடையின்றி திரையிடப்படுவதை உறுதி செய்ய உரிய பாதுகாப்பு வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். படம் திரையிடுவதில் தலையிட நாம் தமிழர் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வீரம் செறிந்த ஈழ விடுதலை போராட்டத்தையும், ஈழ தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே தமிழ்நாட்டில் கிங்டம் தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.