நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், செல்வப்பெருந்தகை வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு சைபர் க்ரைம் போலீஸ் வலைவீச்சு
சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு, நடிகர் தனுஷ் வீடு, காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நடிகர் ரஜினிகாந்த் எங்கள் வீட்டிற்கு வெளியாட்கள் யாரும் உள்ளே வரவில்லை. இதனால் யாரும் சோதனை நடத்த வேண்டாம் என்று வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் அவரது வீட்டின் கேட்டின் அருகே மற்றும் கார் பார்க்கிங் அருகே சோதனை நடத்தி விட்டு திரும்பி சென்றனர். பின்னர் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் தனுஷ் வீடு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனையிட்டனர். புரளி என தெரியவந்தது. குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர்.
