Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான் முதல்வன் திட்டத்தில் சாதித்த மாணவர்கள் லண்டன் பயணம்

கோவை: தமிழ்நாடு அரசு மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில், பொறியியல் மாணவர்களுக்கு சர்வதேச உயர்கல்வி அளிக்க உதவித்தொகை திட்டத்தை துவங்கியது. இதற்கு 80 சதவீத மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்று இருக்க வேண்டும். இதற்கு நடப்பாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த தகுதி வாய்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 100 மாணவர்கள் முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கடந்த மார்ச் 5 முதல் மார்ச் 16 வரை லண்டன் டர்ஹாம் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட 24 மணி நேர ஆன்லைன் பாடத்திட்டத்தை முடித்தனர். அவர்கள் இப்போது இங்கிலாந்தில் ஒரு வார நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளனர். கடுமையான தேர்வு செயல் முறைகளுக்கு பிறகு லண்டன் டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் நேரில் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு சிறந்த 15 பொறியியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இதில், அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்திலிருந்து பிரதீஷ் மற்றும் ஸ்ருதி ஆகிய இரண்டு மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்கள் வரும் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை லண்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் நேரடி பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

இந்த மாணவர்கள் சர்வதேச கல்வி மற்றும் திறன்களை இங்கிலாந்து உயர்கல்வி நிறுவனம் மூலம் பெற உள்ளனர். மாணவர்களின் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் செலவினங்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஏற்றுள்ளதாக கோவை அண்ணா பல்கலைக்கழக முதன்மையர் சரவணகுமார் மற்றும் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் ஆகியோர் தெரிவித்தனர்.