சண்டிகரில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது மேட்டர் அல்ல... இந்த போட்டியில் நமது அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளது. அவை வருமாறு:
* இப்போட்டியில் இந்தியாவில் ஸ்மிருதி மந்தனா, 91 பந்துகளில் அதிரடியாக விளையாடி 117 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இந்திய அணி 292 ரன்கள் எடுத்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு மகளிர் அணி எடுக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்.
* ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே, 102 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் அந்த அணி தோற்பது இதுவே முதல் முறை. இதற்கு முன் 1973ல் இங்கிலாந்துக்கு எதிராக 92 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது.
* 2007க்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. மேலும், 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்ற வெற்றி இது.
* ஆஸ்திரேலிய அணி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பிப். 2024ல் தோல்வி அடைந்தது. இதன்பின்னர் தொடர்ச்சியாக 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு இந்திய சிங்கப்பெண்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
* ஒருநாள் போட்டிகளில் மந்தனா 12வது சதமடித்தார். இதன் மூலம், அதிக சதங்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில், இங்கிலாந்தின் டாமி பியூமாண்ட் உடன் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மெக் லானிங் (15) மற்றும் சூசி பேட்ஸ் (13) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
* மந்தனா தனது சதத்தை வெறும் 77 பந்துகளில் எட்டினார். இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வீராங்கனை அடிக்கும் அதிவேக சதம்.
* போட்டியில் ஆட்ட நாயகி விருதை வென்றதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் தனது 17வது ஆட்ட நாயகி விருதை மந்தனா பெற்றார். இதன் மூலம், சார்லோட் எட்வர்ட்ஸ் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோருடன் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஸ்டாஃபானி டெய்லர் (28) மற்றும் மிதாலி ராஜ் (20) ஆகியோர் அவருக்கு முன்னால் உள்ளனர்.
* மேலும், நடப்பாண்டில் 3, கடந்தாண்டில் 4 சதம் அடித்துள்ளார். மகளிர் கிரிக்கெட் சர்வதேச அரங்கில் யாரும் நிகழ்த்தாத சாதனை இது.