ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டிய வழக்கு ரத்தான லைசென்சை திரும்ப தரக்கோரிய டிடிஎப் வாசனின் மனு தள்ளுபடி: உரிய அதிகாரிகளை அணுக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை: ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக கூறி ரத்து செய்யப்பட்ட வாகன ஓட்டுனர் உரிமத்தை மீண்டும் வழங்கக்கோரி டிடிஎப் வாசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாக கூறி யூ-டியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை பத்து ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கடந்த 2023ம் அக்டோபர் மாதம் உத்தரவிட்டார்.
மேலும், இந்த உத்தரவு 2033ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி டிடிஎப் வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி என்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தாலே புதிய லைசென்ஸ் வழங்கக்கோரி நீதிமன்றத்தை நாடலாம்.
ஆனால், மனுதாரரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. எனவே, புதிய லைசென்ஸ் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். ஆறு மாதங்கள் கடந்து விட்டால் லைசென்ஸ் கோரி நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றில்லை. உரிய அதிகாரிகளை அணுகலாம் எனக்கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.