Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த லியுங் காய் பூக் மெடிக்கல் கம்பெனி கோடாரி தைலத்தை தயாரித்து வருகிறது. இந்த தைலத்தை சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆக்சென் மார்கெட்டிங் இந்தியா நிறுவனம் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் கோடாலி தைலத்திற்கு உரிமம் பெற வேண்டும் என்று ஆக்சென் நிறுவனத்திற்கு அரும்பாக்கத்தில் உள்ள மாநில ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோடாரி தைலத்தையும் சுங்க அதிகாரிகள் முடக்கிவைத்தனர். இதையடுத்து, இறக்குமதி செய்த சரக்கை விடுவிக்க கோரி ஆக்சென் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், கோடாரி தைலம் சுங்க கட்டண வரம்புக்குள் வருவதால், இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகள் சோதனைக்கு உட்பட்டதுதான். மருந்து மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம் ஆயுர்வேத பொருட்களுக்கும் பொருந்தும் என தெரிவித்து, அனைத்து மருந்து பொருட்களுக்கும் இறக்குமதி உரிமம் பெற வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், ஆயுர்வேத மருந்துகளுக்கு லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிப்பது தொடர்பான பழைய விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, ஆக்சென் நிறுவனத்தின் பொருட்களை ஆய்வு செய்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.