Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

14ம் தேதி டெல்லி செல்ல உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு

சென்னை: வரும் 14ம் தேதி டெல்லி செல்ல உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் எடப்பாடியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த பொதுக்குழுவில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு மட்டுமே என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், அதிமுகவில் ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் சேர்க்கப்படுவார்களா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க வேண்டும் எனறு பாஜ மேலிடம் வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அண்மையில் ஓபிஎஸ் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து அண்ணாமலையும் 2 முறை அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போதும் பாஜ கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவியை இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரும் 14ம் தேதி டெல்லி செல்ல உள்ளார். அவர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச உள்ளார். இந்நிலையில் தமிழக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது பற்றியும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ், டிடிவி விவகாரம் குறித்தும் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர்களை அதிமுகவில் சேர்க்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பதாக எடப்பாடி கூறி விட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,‘தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினேன்,’ என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து எடப்பாடியை சந்தித்து விட்டு புறப்பட்ட நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில்,‘ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை கூட்டணிக்குள் கொண்டுவருவது பற்றியோ, தொகுதி பங்கீடு பற்றியோ பேசவில்லை. நேற்றைய பொதுக்குழுவில் நடந்த விவரங்கள் குறித்து பேசினேன். எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தேன,’ என்றார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.