Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலெக்டரை தரக்குறைவாக பேசிய ஆம்ஆத்மி எம்எல்ஏ கைது: 2 ஆண்டுகளுக்கு ஜாமீன் கிடைக்காது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில், மாவட்ட ஆட்சியரைத் தரக்குறைவாகப் பேசியதாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஒருவர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் தோடா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவருக்குச் சுகாதாரத் துறை வழங்க வேண்டிய வாடகைப் பாக்கியை வழங்காதது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஹர்விந்தர் சிங்கிடம் ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் மெஹ்ராஜ் மாலிக் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரைத் தகாத மற்றும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிய காணொலி வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், மெஹ்ராஜ் மாலிக் தொடர்ச்சியாகப் பிரச்னைகளை உருவாக்குபவர் என்றும், அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களைத் தொடர்ந்து அவமதித்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி, கடுமையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் மெஹ்ராஜ் மாலிக் கைது செய்யப்பட்டார். பதவியில் இருக்கும் எம்எல்ஏ ஒருவர், இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். குற்றச்சாட்டு அல்லது விசாரணை இன்றி இரண்டு ஆண்டுகள் வரை ஒருவரைக் காவலில் வைக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக சட்டமன்ற சபாநாயகருகு மாவட்ட ஆட்சியர் தரப்பில் முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக்கின் தொடர்ச்சியான செயல்பாடுகள் மாவட்டத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாக இருந்ததால், அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கைது நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேவேளை, மாநில பாஜக இந்த கைது நடவடிக்கையை வரவேற்றுள்ளது.