பாடாலூர்: பாடாலூர் அருகே இன்று மதியம் ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்தும், பைக்கும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ராணிப்பேட்டை சேர்ந்த பக்தர்கள் கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்றுவிட்டு, இன்று மதியம் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மதியம் உணவருந்தி விட்டு மீண்டும் ராணிப்பேட்டை செல்ல பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவிளக்குறிச்சி பிரிவு சாலையில் யூடர்ன் பஸ் டிரைவர் எடுத்தார். எதிர்பாரதவிதமாக அவ்வழியாக திருச்சி நோக்கி சென்ற பைக் பேருந்து மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் விரைந்து வந்து, பலியான வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த வாலிபர் பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் காட்டுக்கொட்டகை கிராமத்தை சேர்ந்த தேவசகாயம் மகன் திலீப்ராஜ் (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் இறந்த சம்பவம் அன்னமங்கலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


