Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

8 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.45 கோடியில் 772 புதிய வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: விருதுநகர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள 8 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.45 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 772 புதிய வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் இனி பாதுகாப்பான, கவுரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வதை அரசு உறுதி செய்யும் என முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்ததுடன், முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 10,469 வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் அறிவித்தார்.

அதன்படி 28 மாவட்டங்களில் உள்ள 69 முகாம்களில் 10,469 புதிய வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, 629 கோடி ரூபாய் செலவில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக 3,510 புதிய வீடுகள் 186 கோடி ரூபாய் செலவில் 19 மாவட்டங்களில் உள்ள 35 முகாம்களில் வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, 3,510 புதிய வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 3,959 புதிய வீடுகள் 236 கோடி ரூபாய் செலவில் 19 மாவட்டங்களில் உள்ள 35 முகாம்களில் வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, இவற்றில், ஏற்கனவே 3 மாவட்டங்களில் உள்ள 4 முகாம்களில் கட்டி முடிக்கப்பட்ட 236 புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள 3,723 வீடுகளில் தற்போது விருதுநகர் மாவட்டம் - கண்டியாபுரம், மல்லாங்கிணறு மற்றும் குல்லூர்சந்தை, திருவண்ணாமலை மாவட்டம் - தென்பள்ளிப்பட்டு மற்றும் சொரக்கொளத்தூர், தூத்துக்குடி மாவட்டம் - தாப்பாத்தி மற்றும் மாப்பிள்ளையூரணி, சிவகங்கை மாவட்டம் - சென்னலக்குடி ஆகிய 8 முகாம்களில் 44 கோடியே 48 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 772 புதிய வீடுகளுக்கு 6 கோடியே 58 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்த அரசால், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் நலன்காக்க அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித் தொகை ஆகிய நலத்திட்டங்கள் உயர்த்தப்பட்ட விகிதத்தில் வழங்கப்பட்டு வருவதோடு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், தலைமைச்செயலாளர் முருகானந்தம், பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் வள்ளலார், பொதுத்துறை அரசு கூடுதல் செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.