நெல்லை: நெல்லை தனியார் கல்லூரியில் சுகாதாரமில்லாத குடிநீர் காரணமாக 8 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கல்லூரியை மூட மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நெல்லை அருகே திடியூர் பகுதியில் பிரபல தனியார் கல்லுரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
குறிப்பாக வெளியூர் சார்ந்த ஏராளமான மாணவர்கள் படிப்பதால் அவர்களுக்கு அந்த கல்லுரி வளாகத்தில் தாங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லுரி அருகே நம்பியாறு என்று சொல்லக்கூடிய ஒரு ஆறு ஓடுகிறது. இதில் இருந்து உபரி நீர் வெளியே சென்று கொண்டிருந்த நிலையில் கல்லுரி நிர்வாகத்தின் சார்பில் உபரி நீரை கல்லூரி மாணவர்கள் குடிப்பதற்காகவும் உணவு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காகவும் நீரை கல்லூரி நிர்வாகம் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதனால் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படிக்கும் 8 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட சுகாதார துறைக்கு புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று தற்போது சுகாதார துறை அதிகாரிகள் அந்த கல்லுரி மற்றும் வளாகம் முழுவதும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வந்தனர்.
அந்த கல்லூரியில் ஆய்வு நடந்த சமயத்தில் உணவு தயாரிப்பது , குடிநீர் உள்ளிட்ட பல்வேறு மாணவர்கள் பயன்பாடுகளுக்காக சுகாதாரமாக இல்லாத குடிநீர் பயன்படுத்தப்பட்டதாக தகவல் தெரிய வந்துள்ளது. உடனடியாக மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
சுகாதாரம் சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் வரை கல்லூரியை திறக்க வேண்டாம் எனவும் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பிலும் மாணவர்களுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டிற்கு சென்று வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.