83 வயது மூதாட்டிக்கு உலகின் முதல் புரட்சிகர டிரான்ஸ்கதீட்டர் ஈரிதழ் வால்வு மாற்று சிகிச்சை: காவேரி மருத்துவமனையின் சாதனை
சென்னை: 83 அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவர் என பல மருத்துவர்களால் கைவிடப்பட்ட 83 வயது மூதாட்டிக்கு மார்பை திறக்காமல், தொடைசிரை வழியாக இதய வால்வை மாற்றி (TMVR), சென்னையின் காவேரி மருத்துவமனை உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் நடந்தது. மருத்துவர் அனந்தராமன் கூறியதாவது: 83 வயது மூதாட்டிக்கு பல இணைநோய்கள் இருந்தன. கடுமையான ‘மைட்ரல் ஆனுலர் கால்சி பிகேஷன்’ (MAC) பாதிப்பால் அவரது இதய வால்வு செயலிழந்த நிலையில், மீண்டும் மீண்டும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். ஏற்கனவே இருமுறை புற்றுநோய்க்காக கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்ததால், திறந்த இதய அறுவை சிகிச்சை என்பது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும் என இந்தியாவின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறிவிட்டனர்.
கடுமையான கால்சியம் படிந்த இதய ஈரிதழ் வால்வு என்பது, நமது இதயத்தில் உள்ள மைட்ரல் (ஈரிதழ்) வால்வு, திறந்து மூடும் ஒரு கதவு போன்று ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. ஆனால், இதய ஈரிதழ் வால்வு பாதிப்பில், இந்தக் கதவு பாறை போல இறுகி, சுண்ணாம்பு பூசி அடைத்தது போல் ஆகிவிடுகிறது. இதனால் மூச்சுத்திணறல், கடும் சோர்வு, இதய செயலிழப்பு என நோயாளிகள் உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பாறை போன்று இறுகிய இந்தப் பகுதியில் புதிய வால்வைப் பொருத்துவது என்பது, உடைந்த சுவரில் கதவை மாட்டுவது போன்றது; அது விரிசல், ரத்தக் கசிவு மற்றும் புதிய வால்வின் செயலிழப்பு என ஆபத்தில் முடியலாம்; இதனாலேயே கதீட்டர் அடிப்படையிலான வழக்கமான அறுவை சிகிச்சைகள் இத்தகைய பாதிப்புள்ள நபர்களுக்கு பாதுகாப்பாற்றதாக கருதப்படுகின்றன.
இந்தச் சவால்களை எதிர்கொள்ள முதன்முறையாக ஒரு டிரான்ஸ்-கதீட்டர் உத்தியை நாங்கள் உருவாக்கினோம். ஒரு சிறப்பு வெளிப்புற உறை கொண்ட செயற்கை வால்வைத் தயாரித்த நாங்கள், அதை மிகத் துல்லியமாக, மார்பைத் திறக்காமல், தொடை சிரை வழியாகவே செலுத்தி, பாறை போன்று இறுகிய அந்தப் பகுதியில் கசிவு ஏற்படாதவாறு பாதுகாப்பாகப் பொருத்தினோம். இதற்கு முன், இது போன்ற சிக்கலான சிகிச்சைகள் திறந்த இதய அறுவை சிகிச்சை மூலமே செய்யப்பட்டன. ஆனால் நாங்கள், ஒரு சிறு துளை வழியாகவே இந்த புதிய சாதனையை நிகழ்த்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.