சென்னை: சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் (34). இவர், யானைக்கவுனி, வெங்கட்ராயன் தெருவில் 'லக்கரம் கோல்டு ஸ்மித்' என்ற பெயரில் நகை பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, இவரது கடைக்கு தங்க காசு வாங்குவதற்காக 2 நபர்கள் வந்துள்ளனர். அப்போது ஜெகதீஸ் நகைகளை காட்டி விட்டு, பட்டறையின் அறைக்குள் சென்று திரும்பி வந்தபோது, மர்ம நபர்கள் மயக்க மருந்தை ஜெகதீஸ் முகத்தில் அடித்து, தாக்கி உள்ளனர். இதில், ஜெகதீஸ் மயக்கமடைந்துள்ளார். பின், 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 800 கிராம் தங்க காசுகளை கொள்ளையடித்து, 'சிசிடிவி' கேமராக்களை அடித்து உடைத்து விட்டு, அதனுடைய 'டி.வி.ஆர்.,யும், கையுடன் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சில மணி நேரத்தில் மயக்கம் தெளிந்த ஜெகதீஸ், அதே தெருவில் உள்ள உறவினரான சேத்தன் கடைக்கு சென்றுள்ளார். அவர், ஜெகதீஸ் காயங்களுடன் இருப்பதை பார்த்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் யானைக்கவுனி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் பட்டறையில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


