Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

6 திருக்கோயில்களை சேர்ந்த 47 பேருக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 6 திருக்கோயிலை சேர்ந்த 16 அர்ச்சகர்கள் மற்றும் 31 பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வர்மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றபின் ரூ.225 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 632 குடியிருப்புகள் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன. அவற்றில் 95 அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் நிறைவு பெற்றுள்ளன. அவற்றிற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் திருக்கோயில் அர்ச்சகர்களுக்கும், பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தங்கசாலை - ஏகாம்பரேசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர் - திருவள்ளுவர் திருக்கோயில், சைதாப்பேட்டை - காரணீசுவரர் திருக்கோயில், கன்னியாகுமரி - கிருஷ்ணன்கோவில், செங்கல்பட்டு - திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் திருக்கோயில், தருமபுரி மாவட்டம், குமாரசாமிப்பேட்டை, அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய 6 திருக்கோயில்கள் சார்பில் ரூ.10.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகளில் 16 அர்ச்சகர்கள் மற்றும் 31 பணியாளர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தர், கூடுதல் ஆணையர்கள் ரவிச்சந்திரன், ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.