திருவனந்தபுரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு கேரளாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். நேற்று மாலை 6.20 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவருக்கு விமானநிலையத்தில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கிய ஜனாதிபதி, இன்று காலை 9.35 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை புறப்பட்டு செல்கிறார். 10.20 மணியளவில் நிலக்கல்லில் இறங்கும் அவர், அங்கிருந்து கார் மூலம் பம்பை செல்கிறார். பம்பை கணபதி கோயிலில் வைத்து இருமுடி கட்டிய பின் 11 மணியளவில் பம்பையில் இருந்து ஜீப் மூலம் சன்னிதானம் செல்வார். மதியம் 12.20 மணி முதல் 1 மணி வரை அவர் சபரிமலையில் தரிசனம் செய்கிறார்.மதிய உணவுக்குப் பின்னர் நிலக்கல் திரும்பும் அவர் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.