Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு ஆதரவாக காங்., விஐபி கட்சியின் 4 வேட்பாளர்கள் வாபஸ்: பீகார் தேர்தலில் திடீர் திருப்பம்

பாட்னா: பீகார் இந்தியா கூட்டணியில் ஏற்பட்டிருந்த சகோதர சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் விஐபி கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். பீகாரில் வரும் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தரப்புக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் பல தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே போட்டி வேட்பாளர்கள் களமிறங்கியதால், ‘சகோதர சண்டை’ ஏற்பட்டது.

இந்தச் சூழலில், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவும், துணை முதலமைச்சர் வேட்பாளராக விகாஸ்ஷீல் இன்சான் கட்சியின் (விஐபி) தலைவர் முகேஷ் சஹானியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், ‘தேஜஸ்வி யாதவை இந்தத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அறிவிக்கிறேன். மக்கள் அவரை ஆதரிப்பார்கள்’ என்றார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கூட்டணியில் நிலவிய குழப்பங்களுக்குத் தீர்வு காணும் வகையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை ஆதரித்து, நான்கு தொகுதிகளில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த இதர வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். அதன்படி, வர்சாலிகஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சதீஷ் குமார், லால்கஞ்ச் தொகுதியில் ஆதித்ய குமார், பிரான்பூரில் தௌகிர் ஆலம் ஆகியோரும், பாபுபர்ஹி தொகுதியில் விஐபி கட்சி வேட்பாளர் பிந்து குலாப் யாதவும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைந்த தேர்தல் அறிக்கை வரும் 28ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11 தொகுதியில் நேருக்கு நேர்

‘இந்தியா’ கூட்டணியில் மாநிலம் முழுவதும் குறைந்தது 11 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளே ஒன்றுக்கொன்று எதிராக வேட்பாளர்களை நிறுத்தி, ‘நட்பு போட்டியில்’ ஈடுபட்டுள்ளன. வைஷாலி, வாரிசலிகஞ்ச், லால்கஞ்ச் உள்ளிட்ட 6 தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், காங்கிரசும் நேருக்கு நேர் மோதுகின்றன. பச்வாரா, ராஜபாகர், ரோசரா உள்ளிட்ட 4 தொகுதிகளில் காங்கிரசும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எதிரெதிரே போட்டியிடுகின்றன.