சென்னை: தமிழகம் முழுவதும் 45 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 13 பேர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் எஸ்.அல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் சென்னை மாவட்ட நீதிபதிகளின் இடமாற்ற விபரம் வருமாறு: திருப்பூர் தலைமை ஜூடீசியல் மாஜிஸ்திரேட் ஜெ.ஓம்பிரகாஷ் சென்னை 14வது சிட்டி சிவில் நீதிமன்ற (சிபிஐ நீதிமன்றம்) கூடுதல் நீதிபதியாகவும், தமிழ் சட்ட இதழ் இணை ஆசிரியர் டி.டி.சக்ரவர்த்தி சென்னை நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், சென்னை மாவட்ட போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட நீதிபதி எம்.சுமதி சாய் பிரியா சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 10வது கூடுதல் நீதிபதியாகவும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பதிவாளர் (சட்டம்) என்.முரளிதரன் ஊட்டி மாவட்ட நீதிபதியாகவும், சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெ.சந்திரன் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதியாகவும், தருமபுரி குடும்பநல நீதிமன்ற நீதிபதி கே.கீதாராணி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் 8வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.மலர்வாலண்டினா அரியலூர் முதன்மை மாவட்ட நீதிபதியாகவும், கடலூர் குடும்பநல நீதிமன்ற நீதிபதி பி.வித்யா எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டாகவும், விழுப்புரம் குடும்பநல நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐஸ்வரானே சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் சென்னை 8வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.