ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ராணிப்பேட்டை அருகே நவல்பூர் காரை கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் வேகமாக வந்த கார் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. கர்நாடக மணிலா பதிவெண் கொண்ட கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் சென்ற தினேஷ் (20), சாஜன் (26), பாலமுருகன் (19) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களை மீட்டு வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


