பட்டுக்கோட்டை: தஞ்சை அருகே 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன் என்று கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை-கோபாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (38). இவர் மதுக்கூரில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா (35). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 6ம் வகுப்பு படிக்கும் ஓவியா (11), 3ம் வகுப்பு படிக்கும் கீர்த்தி (8) என்ற 2 மகள்களும், 1ம் வகுப்பு படிக்கும் ஈஸ்வர் (5) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நித்யா சமூக வலைதளம் மூலமாக மன்னார்குடியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கமாகி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அதிலிருந்தே வினோத்குமார் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் வீட்டிற்கு வந்த வினோத்குமார் தனது வீட்டை பூட்டிக்கொண்டு தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து வினோத்குமார் மதுக்கூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது வினோத்குமார் அளித்த வாக்கு மூலத்தில், ‘எனது மனைவி நித்யா மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் பழகி வந்தார். இதை நான் கண்டித்தேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு என்னையும், 3 குழந்தைகளை விட்டுவிட்டு அந்த நபருடன் ஓடிவிட்டார். எனது மனைவி வேறு ஒருவருடன் ஓடிவிட்டதால் அவள் மீது நான் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தேன். கடந்த 6 மாதமாக போதிய வருமானமும் இல்லை. 3 குழந்தைகளையும் என்னால் பராமரிக்க முடியவில்லை. எனக்கு உதவி செய்வதற்கும் யாரும் இல்லை. இதனால் குடித்துவிட்டு நான் போதையில் எனது மூன்று குழந்தைகளையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன்’ என்றார்.