*உடனடி நடவடிக்கைக்கு டிஆர்ஓ உத்தரவு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்டத்தில் 348 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு டிஆர்ஓ உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ ராம்பிரதீபன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், ஆர்டிஓ ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, அரசு நலத்திட்ட உதவிகள், பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், சுய தொழில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 348 பேர் மனு அளித்தனர்.
பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க டிஆர்ஓ உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
அப்போது, நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போடுவதற்காக மூட்டைக்கு ரூ.40 வரை வசூலிப்பதாகவும், சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நெல் மீது பணத்தை வைத்து கொண்டுவந்தனர். அதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, தங்கள் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.
அதேபோல், வானாபுரம் பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவர், முன்விரோதம் காரணமாக தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கறுப்பு கொடியுடன் வந்து மனு அளித்தார். அவரை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.இந்நிலையில், தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, வழக்கம்போல கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.