ரெட்டியார்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே மல்லையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (29). இவர் வாட்ஸ் அப்பில் குழு ஒன்றை உருவாக்கி, அதில் கன்னிவாடி அருகே காப்புக்காடு பகுதியில் உள்ள சிவன் கோயில் மலையில், மலையேற்ற பயிற்சிக்கு நபர்களை சேர்த்துள்ளார்.
இக்குழுவைச் சேர்ந்த நபர்கள் நேற்று அதிகாலை 4 மணி அளவில், மல்லையாபுரம் பகுதிக்கு வந்து அங்கிருந்து மலை ஏறும் பயிற்சிக்கு சென்றனர். தகவல் அடிப்படையில், கன்னிவாடி வனச்சரகர் குமரேசன் தலைமையில் வனவர் சபரிநாதன், வனக்காப்பாளர்கள் மற்றும் திண்டுக்கல் தனிப்பிரிவினர் இணைந்து நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 29 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் திண்டுக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
மேலும் லிங்கேஸ்வரன், வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து கட்டணம் வசூல் செய்து அடிக்கடி குழுவாக சேர்ந்து மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தடையை மீறி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 29 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், தலா ரூ.4,500 வீதம் மொத்தம் ரூ.1,30,500 அபராதம் விதித்தனர்.