Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூர் அருகே 2 மாவட்டத்தை இணைக்கும் தரைப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 20 கிராமங்கள் துண்டிப்பு

விருத்தாசலம்: பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் இரண்டு மாவட்டங்களை இணைக்கும் தரைப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் 20 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள சௌந்தரசோழபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் கடலூர் - அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ரூ.12 கோடியே 60 லட்சம் செலவில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் செளந்தரசோழ புரத்தில் இருந்து வெள்ளாற்றின் அக்கரையில் உள்ள அரியலூர் மாவட்டம், கோட்டைக்காடு வரை இணைப்பு சாலையாக தற்காலிக மண் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வெள்ளாற்றை கடந்து இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கள்ளக்குறிச்சி-திருச்சி மாவட்டங்களில் பெய்துவரும் மழை காரணமாக வயல்வெளி பகுதியில் உள்ள மழைநீர் வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்காக வந்து கொண்டிருக்கிறது. இதில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சௌந்தரசோழபுரம்-கோட்டைக்காடு தரைப்பாலம் நேற்று அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்தை பயன்படுத்தும் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு, அங்கு வசிக்கும் மக்கள் 15 கிலோமீட்டர் தொலைவு சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மேம்பாலம் அமைக்கும் பணி 70 சதவீதம் முடிந்த நிலையில் தற்போது கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரணத்தால் மேம்பால பணியும் நிறைவடையாமல், தற்காலிக பாலமும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.