Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வடலூரில் வள்ளலாரின் 203-வது அவதார நாள் விழா; அமைச்சர்கள் பங்கேற்பு!

வடலூர்: கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 203வது அவதார தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் கடலூர் மாவட்டம், மருதூர் கிராமத்தில் 1823-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி பிறந்தார். அவர் சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை தொடங்கி அதன் கொள்கைகளைப் பரப்பி வந்தார். மேலும் பசியால் வாடுவோர் உணவருந்திச் செல்வதற்காக வடலூரில் சத்திய ஞான சபையில் தரும சாலையையும் தொடங்கினார். தரும சாலையில் அணையா அடுப்பு மூலம் உணவு தயாரிக்கப்பட்டு ஏழை, எளிய ஆதரவற்றோருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. வள்ளலார் பிறந்த 203-ஆவது அவதார தின விழா(வருவிக்கவுற்ற நாள்) வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் காலை 5 மணி முதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சத்திய தரும சாலையில் காலை 7.30 மணி அளவில் கொடி பாடல் பாடியபடி சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனையா சத்திய தர்ம சாலையில் அன்னதானம் வழங்கினர்.

அதேபோல, வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமத்தில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.மேலும் வள்ளலார் சர்வதேச மையம் சைட் Bயில் சித்த மருத்துவமனை, முதியோர் இல்லம், தங்கும் விடுதி உள்ளிட்டவைகள் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் வரைபடம்,கட்டிடத்தை பார்வையிட்டு பணிகளை குறைந்து முடிக்குமாறு உத்தரவிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, வள்ளலாருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், வருகின்ற நவம்பர், டிசம்பர் மாதத்தில் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் சன்மார்க்க மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. வள்ளலாரின் நெறிகளை பாதுகாக்கும் அரசாக திமுக உள்ளது என தெரிவித்தார். பெருவெளி தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில்,பெருவெளிக்கும் சர்வதேச மையத்திற்கும் எவ்வித இடர்பாடும் கிடையாது என்பதற்காகவே ஒரு பகுதிக்கு நீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. ஆக்கிரமிப்பை கணக்கிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.நிச்சயம் நீதி வெல்லும்,சர்வதேச வள்ளலார் மையம் திறந்த மனதோடு எந்தவொரு காழ்ப்புணர்ச்சி இல்லாமலும் அவர் பெருமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் வள்ளலார் ஆன்மா துணை நிற்கும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இணை இயக்குனர் ஜோதி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன்,மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார், வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார்,குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் விஜய் ஆனந்த், வடலூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன்,துணைத் தலைவர் சுப்புராயலு, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சங்கம் மாநில தலைவர் டாக்டர் அருள் நாகலிங்கம், பொதுச் செயலாளர் டாக்டர்.வெற்றிவேல், உட்பட பலரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலைய அறங்காவலர் குழு தலைவர் அழகானந்தன், தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார், அறங்காவலர்கள் கனக லட்சுமி,கனக சபை,ஸ்ரீ ராமலு,கிஷோர் ஆகியோர்கள் செய்திருந்தனர்.