போபால்: மத்தியபிரதேச முன்னாள் முதல்வரும், பாஜ தலைவருமான உமாபாரதி கடந்த சனிக்கிழமை லலித்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “உத்தரபிரதேசம் ஜான்சி தொகுதியின் ஒரு பகுதியாக இருக்கும் பந்தல்கண்ட் எனக்கு உணர்ச்சிப்பூர்வமான ஒரு வீடு. பாஜ மேலிடம் கேட்டால் நிச்சயம் 2029 மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன்” என கூறியிருந்தார்.
இந்நிலையில் உமாபாரதி தன் எக்ஸ் பதிவில், “பாஜ தலைமை கேட்டு கொண்டால் 2029 மக்களவை தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். ஆனால் ஜான்சி தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன்” என தெரிவித்துள்ளார். உமாபாரதி, கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ஜான்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு 2019, 2024 தேர்தல்களில் அவருக்கு பாஜ சீட் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.