சென்னை: ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு வரைவு அறிவிக்கையை வெளியிட்டது. அதில், 20 ஆண்டுகளுக்கும் மேலான வர்த்தக ரீதியான கனரக, நடுத்தர வாகனங்களுக்கான பதிவைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை உயர்த்தப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இந்த பரிந்துரைக்கு போக்குவரத்து சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், வர்த்தக வாகனங்களுக்கான கட்டண உயர்வு முன்மொழிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்தநிலையில் ஒன்றிய போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பில் பதிவிடப்பட்டுள்ள அறிவிப்பில் 20 ஆண்டுகளுக்கு பழமையான வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்படுவதாக அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.
அதன்படி, 20 ஆண்டுகளுக்கும் மேலான லேசான மோட்டார் வாகனங்களுக்கான (எல்விஎம்) பிட்னஸ் புதுப்பிப்புக் கட்டணம் ரூ.10,000லிருந்து ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு கனரக வர்த்தக வாகனங்களுக்கு (பேருந்துகள் மற்றும் லாரிகள்) மிக அதிகமாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலான கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.3,500லிருந்து அதிரடியாக ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நடுத்தர வர்த்தக வாகனங்களுக்கு இது ரூ.20,000 ஆகும். இந்த நடவடிக்கை பொதுமக்கள் தொடர்ந்து பழைய வாகனத்தை பயன்படுத்துவதை குறைக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


