Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழாவில் 200 கண்காணிப்பு கேமராக்களுடன் 1,683 போலீசார் பாதுகாப்பு: மாவட்ட எஸ்.பி தகவல்

திருத்தணி: முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் வரும் 29ம் தேதி ஆடிக்கிருத்திகை விழா மற்றும் சரவண பொய்கை திருக்குளத்தில் முதல் நாள் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விழா ஏற்பாடுகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட எஸ் பி னிவாச பெருமாள், போக்குவரத்து துறை பொது மேலாளர் நெடுஞ்செழியன், கோட்டாட்சியர் தீபா, திருக்கோயில் இணை ஆணையர் கூடுதல் பொறுப்பு அருணாச்சலம், நகராட்சி ஆணையர் அருள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று, பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்யவும், சுகாதாரம். குடிநீர், மின்சாரம், தற்காலிக பேருந்து நிலையங்கள், மருத்துவ முகாம்கள், கழிவறைகள், மின் விளக்குகள், பக்தர்கள் தங்கும் அறைகள், போக்குவரத்து, மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு விழா சிறப்பாக நடைபெற பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் டிஎஸ்பி விக்னேஷ், திருக்கோயில் அறங்காவலர் சுரேஷ்பாபு, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு மாவட்ட எஸ்.பி னிவாச பெருமாள் நிருபர்களிடம் கூறுகையில், பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 1,683 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதே நேரத்தில் குற்ற சம்பவங்கள் தடுக்க 200 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, மலைக்கோயில் பேருந்து நிலையம், தற்காலிக பேருந்து நிலையங்களில் 20 பகுதிகளில் வாட்ச் டவர்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாடு, ஆந்திர பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 28ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு 360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.