Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

13 நிறுவனங்கள் டெண்டரில் தேர்வு முதற்கட்டமாக 1.5 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி விரைவில் தொடக்கம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: முதற்கட்டமாக 1.5 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கு 13 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணியை தொடங்க உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 3.04 கோடி மின்நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களின் மின்சார பயன்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த தமிழக அரசும் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் 4 கட்டங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) வெளியிடப்பட்டன.

இதற்காக 2 முறை டெண்டர் கோரப்பட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக மார்ச் 14ம் தேதி மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.19,235 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதற்கான டெண்டர் கோரப்பட்டது. குறிப்பாக, சென்னை, வேலூர் மண்டலத்தில் 49.43 லட்சம், கோவை, ஈரோடு மண்டலத்தில் 56.74 லட்சம், கரூர், நெல்லை மண்டலங்களில் 49.98 லட்சம், திருச்சி, தஞ்சாவூர் மண்டலங்களில் 49.77 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் என 6 கட்டமாக பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கடந்த ஆக.5ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் டெண்டர் திறக்கப்பட்டது. இந்த டெண்டரில் 5 தொகுப்புகளுக்கு தலா 6 நிறுவனங்களும், ஒரு தொகுப்புக்கு 12 நிறுவனங்களும் என மொத்தம் 42 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் முதற்கட்டமாக 1.5 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின் வாரியத்தின் 12 மண்டலங்களில், இரு மண்டலங்களுக்கு ஒரு தொகுப்பு என 6 தொகுப்புகளாக ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு டெண்டர் கோரப்பட்டது. நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ள விலைப்புள்ளியின் தொழில்நுட்ப மற்றும் வணிக விவரம் சரிபார்க்க, நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. சிறப்பு குழுவினர் விலைப்புள்ளிகளை ஆய்வு செய்து தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்வர். இந்நிலையில் முதற்கட்டமாக 1.5 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. இந்த 1.5 கோடி மீட்டர்களை பொருத்த 13 நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றுள்ளன. 12 மண்டலங்களிலும் மீட்டர்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பணியை எளிதாக்க 50 சிறு தொகுப்புகளாக இவை பிரிக்கப்பட்டுள்ளன. ஓரிரு வாரங்களில் தகுதியான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும். பணி ஆணை வழங்கி 3 மாதங்களில் மீட்டர் பொருத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.