நெல்லை: நெல்லை மாநகர் மாவட்ட அதிமுகவில் ஒரு பகுதி செயலாளர் உள்பட 12 வட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுகவில் பல்ேவறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பல நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நெல்லை மாநகர் மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் மாரி, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் கிளாசிக் பாரத், பாளை தெற்கு பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வட்ட செயலாளர்களாக உள்ள புஷ்பராஜ் ஜெய்சன், அலெக்ஸ்பாண்டியன், சுப்பையா, பாக்கியராஜ், வேலு, பெருமாள், எடிசன், முருகன், மோசஸ், ஜெயச்சந்திர குமார், வரதராஜன் உள்ளிட்டோர் தங்கள் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றனர். புதிய நிர்வாகிகளை பொறுத்தவரை பாளை தெற்கு பகுதி செயலாளராக தியாகராஜ நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(பெல்) நியமிக்கப்படுகிறார். பாளை வடக்கு பகுதி புதிய வட்ட செயலாளர்களாக சண்முகராஜ், ஸ்டாலின், கருப்பசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தெற்கு பகுதி வட்ட செயலாளராக கிளாசிக் பாரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலப்பாளையம் கிழக்கு பகுதி புதிய வட்ட செயலாளர்களாக ஆனந்தராஜ், மணிகண்டன் ஆகியோரும், தச்சநல்லூர் கிழக்கு பகுதி புதிய வட்ட செயலாளர்களாக செல்லையா, நல்லபெருமாள், மேற்கு பகுதி புதிய வட்ட செயலாளர்களாக மாரி, மகேஷ் ஆகியோரும், நெல்லை மேற்கு பகுதி புதிய வட்ட செயலாளர்களாக முகம்மது முஸ்தபா, தெய்வேந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்துள்ளார்.
