Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீட்கப்பட்ட ₹20 லட்சம் மதிப்பு 120 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

*எஸ்பி வழங்கினார்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீசாரால் மீட்கப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள 120 செல்போன்களை உரியவர்களிடம் எஸ்பி கிரண் ஸ்ருதி நேற்று வழங்கினார்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் தவற விட்ட மற்றும் மர்ம நபர்களால் திருடப்பட்ட செல்போன்களை மீட்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் பொதுமக்கள் பலர் தங்களின் செல்போன்களை தவறவிட்டது அல்லது மர்ம நபர்களால் திருடப்பட்டது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிந்து செல்போன்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி, கடந்த 4 மாதங்களில் பொதுமக்கள் தவறவிட்ட 120 செல்போன்களை போலீசார் மீட்டுள்ளனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இந்நிலையில், திருட்டு போன அல்லது தவறவிட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதற்கு எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும், செல்போனை தவறவிட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இணைய வழி குற்றங்கள் தொடர்பாக 1930 புகார் தெரிவிக்குமாறு எஸ்பி அறிவுறுத்தினார்.

இதில், ஏடிஎஸ்பிக்கள் குணசேகரன், குமார், டிஎஸ்பிக்கள் சீராளன், வெங்கடகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், கலையரசி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

கடந்த மே மாதம் 14ம் தேதி வாலாஜா காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் 30 பேரின் செல்போன்களை போலீசார் மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.