11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வந்தடைந்தது மாவட்டத்தில் 4 மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
*சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பு
ஈரோடு : பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் ஈரோடு வந்தடைந்தது. மாவட்டத்தில் 4 கட்டு காப்பு மையங்களில் வைத்து சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 3ம் தேதி முதல் தொடங்கி, மார்ச் மாதம் 23ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5ம் தேதி முதல் தொடங்கி, மார்ச் மாதம் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த இரண்டு வகுப்பு பொதுத்தேர்வுகளையும் மாவட்டத்தில் 47,354 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டத்தில் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வினாத்தாள் ஈரோடு மாவட்டத்திற்கு வந்தடைந்தது. இதனை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மாவட்டத்தில் ஈரோடு, கோபி, அந்தியூர், தாளவாடி ஆகிய இடங்களில் உள்ள கட்டு காப்பு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அந்த அறையினை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதில், ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கட்டு காப்பு மையத்தில் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த வினாத்தாள் அறையின் முன் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மீதமுள்ள 3 கட்டு காப்பு மையத்திலும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.