கார் கண்ணாடி உடைத்து மிளகாய்பொடி தூவி சென்னை நகை கடை ஊழியர்களிடம் 10 கிலோ தங்கம் துணிகர கொள்ளை: திருச்சி அருகே 4 பேர் கைவரிசை
சமயபுரம்: சென்னை சவுகார்பேட்டையில் ஆர்.கே. ஜூவல்லரி என்ற நகைக்கடை உள்ளது. இந்த கடை மேலாளர் பிரதீப்ஷாட், திண்டுக்கல்லில் உள்ள நகை கடையில் நகைகளை விற்பதற்காக கடை ஊழியர்கள் 2 பேருடன் காரில் நேற்றுமுன்தினம் சென்றார்.அங்கு நகைகளை விற்று விட்டு எஞ்சிய 10 கிலோ நகைகளுடன் இரவு 3 பேரும் சென்னைக்கு புறப்பட்டனர். டிரைவருடன் சேர்த்து 4 பேர் இருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அடுத்த கீழவங்காரம் அருகே சாலையோரம் காரை நிறுத்தி மேலாளர் இறங்கி சிறுநீர் கழித்து கொண்டிருந்தார். அப்போது மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 4 மர்ம நபர்கள், திடீரென நிறுத்தி இறங்கினர்.
டிரைவர் பக்கம் உள்ள கண்ணாடியை உடைத்து அவர் மீதும் பின்சீட்டில் உட்கார்ந்திருந்த 2 பேர் மீதும் முகத்தில் மிளகாய்பொடியை வீசினர். தொடர்ந்து மேலாளர் முகத்திலும் மிளகாய் பொடியை வீசினர். கண் எரிச்சலில் 4 பேரும் அலறினர். அந்த நேரத்தில் காரில் 2 பேக்குகளில் வைத்திருந்த 10 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் எடுத்து கொண்டு காரில் தப்பினர். இதன் மதிப்பு ரூ.12 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமயபுரம் போலீசில் நகை கடை மேலாளர் பிரதீப் ஷாட் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வந்து. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் திருச்சி எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைத்து கொள்ளையரை தேடுகின்றனர். மேலும், கொள்ளை சம்பவத்தில் கடை மேலாளர் உட்பட 4 பேருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.