Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்சென்னை தொகுதிக்கு நிகராக வடசென்னையை மாற்றுவேன்: அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி

சென்னை: வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோ கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமரன் நகர், அபிராமி அம்மன் கோயில் தொடங்கி கருணாநிதி தெரு, சாய் நகர், பெரியார் தெரு, ஜி.கே.எம் காலனி, வ.உ.சி தெரு, நாராயண தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து, பெரியார் நகர் வெங்கட்ராமன் சாலை தொடங்கி கந்தசாமி சாலை, கார்த்திகேயன் சாலை, ஜவகர் நகர், கே.சி.கார்டன், ஆண்டாள் அவென்யு, சக்திவேல் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், ஒன்றிய பாஜ அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதனால்தான் நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு உற்சாக வரவேற்பை அளிக்கின்றனர்.

எங்களை பொறுத்தவரை பிரசாரம் தொடங்கி இன்று வரை எங்களை மிகுந்த உற்சாகத்தோடு பொதுமக்கள் வரவேற்கின்றனர்.

அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது பிரச்னைகளை எங்களிடம் கூறுகிறார்கள். அதனை நாங்கள் சரி செய்து தருவோம் என அவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம். அதனால் மக்கள் எங்களுக்கு உற்சாகமான வரவேற்பை அளிக்கின்றனர். இதனை பார்க்கின்றபோது எங்களது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. வடசென்னை மக்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தால் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியை தென் சென்னைக்கு நிகராக உயர்த்தி காட்டுவேன். மேலும் வட சென்னையில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது என பல புகார்கள் வந்துள்ளன‌. அதனை இரும்பு கரம் கொண்டு கண்டிப்பாக ஒடுக்க பாடுபடுவேன் என பேசினார்.

வாக்கு சேகரிப்பின்போது மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.