Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாத்தான்குளத்தில் முருங்கை காய் விலை வீழ்ச்சி: கிலோ ரூ.1.50 விற்பனை, விவசாயிகள் கவலை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் முருங்கைகாய் விலை கடும் விழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ1.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் முருங்கை விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். சாத்தான்குளம் பகுதியில் விளையும் முருங்கை காய்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் இப்பகுதியில் விவசாயிகள் முருங்கை பயிரிடுவதை அதிகரித்து வருகின்றனர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் முருங்கைகளை மொத்த வியாபாரிகள், விவசாயிகளிடம் சந்தையில் உள்ள விலைப்படி வாங்கி, நெல்லை, மதுரை, திருவனந்தபுரம் மற்றும் கனடா, மலேசியா, லண்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு பதப்படுத்தி விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது முருங்கை சீசன் என்பதால் முருங்கை காய் விளைச்சல் சாத்தான்குளம் பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. முருங்கை காய் வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.1.50க்கு சந்தையில் விற்பனைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

வெளிச்சந்தையிலும் விலை குறைவாக உள்ளதால் வியாபாரிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் மட்டுமே முருங்கை காயை விற்பனைக்கு வாங்கி கொள்ளும் நிலை உள்ளது. முருங்கைக்கு விலை இல்லாததால் பறிப்பு மற்றும் கட்டும் கூலி போதுமானதாக இல்லையென விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து முருங்கை காய் மொத்த வியாபாரி பாலமுருகன் கூறுகையில், சாத்தான்குளம் பகுதி முருங்கை காய் நல்ல தரம் வாய்ந்தது என்பதால் வெளியிடங்களில் நல்ல மவுசு உள்ளது. முருங்கை காய் விலை கடந்த மாதம் கிலோ ரூ.20 வரை எடுத்து கொள்ளப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.10 வரை எடுத்து கொள்ளப்பட்டது. தற்போது முருங்கை விளைச்சல் அதிகரித்து வரத்து அதிகமாக உள்ளதால் கிலோ ரூ1.50க்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

சில நேரம் சந்தையில் இந்த விலையும் கிடைக்காமல் நஷ்டமடையும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் வழக்கம் போல் முருங்கைகாய் கொண்டு வரும் விவசாயிகளிடம் மட்டுமே முருங்கைகாய் கொள்முதல் செய்து கொண்டு புதிதாக கொண்டு வரும் விவசாயிகளிடம் முருங்கைகாய் கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம்’ என்றார்.

முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமையுமா?

சாத்தான்குளம், உடன்குடி, திசையன்விளை பகுதியில் முருங்கை விவசாயம் அதிகரித்து வருவதால் முருங்கை காயை எளிதில் சந்தைப்படுத்திடும் வகையில் தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும். தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இப்பகுதி முருங்கை விவசாயிகள், வியாபாரிகள் பயன்பெறும் வகையில் முருங்கைக்காயில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டுமென விவசாயிகள், வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.