சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலையும் ராகு கேது சிலைகளும் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில், புன்னைவனந்தர் சன்னதியில் கற்கள் பதித்த பழமையான மயில் சிலை, ராகு, கேது சிலைகள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் சிறப்பு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். செயல் அலுவலராக இருந்த திருமகள், ஊழியர்கள் வேணு, ஸ்தபதி முத்தையா, அர்ச்சகர்கள் சிலைகளை மாற்றியது அம்பலமானது. வழக்கின் விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சிலை திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திருமகள் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி நாகார்ஜுன் உத்தரவிட்டார்.
Advertisement