Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புவிசார் குறியீடு பெற வழங்கப்படும் மானியம்; ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்வு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஜி.கே.மணி (பாமக) பேசுகையில், ‘பென்னாகரம் தொகுதியில் புளி ஏராளமாக சாகுபடி செய்யப்படுவதால் அதனை பதப்படுத்த அரசு மானியத்துடன் கடன் உதவி வழங்குமா. இப்பகுதியில் விளையும் புளிக்கு அரசு புவிசார் குறியீடு பெற்று தருமா,’ என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் 445 ஏக்கர் பரப்பளவில் புளி சாகுபடி செய்யப்பட்டு, 2 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் புளி பதப்படுத்தும் தொழில் செய்வதற்கு 10 தொழில்முனைவோருக்கு ரூ.34 லட்சம் மானியத்துடன் ரூ.2 கோடியே 89 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. புளி பதப்படுத்தும் தொழில் செய்ய முன்வரும் தொழில்முனைவோருக்கு துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் 5 சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் கீழ் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டு

வருகிறது.

புவிசார் குறியீடானது வேளாண் பொருட்கள், உணவு பொருட்கள், கைவினை பொருட்கள் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்திய அளவில் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் அறிவுசார் சொத்துரிமையை பாதுகாத்து தமிழ்நாட்டின் பெருமைய உலகிற்கு உணர்த்தும் வகையில், முதல்வர் கடந்த சனிக்கிழமை புவிசார் குறியீடு பெறுவதற்கு வழங்கப்படும் மானியத்தை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருளுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும். அதற்குரிய ஆவணங்களை தேடி பெற்று, புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.