Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கில் நடிகர் சாகில் கான் கைது: சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அதிரடி

மும்பை: மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் சாகில் கானை சத்தீஸ்கரில் வைத்து மும்பை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர். மகாதேவ் என்ற சூதாட்ட செயலி மூலம் பொதுமக்களை ஏமாற்றி ரூ.15,000 கோடி மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும், அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 31 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் நடிகர் சாகில் கானும் ஒருவர். ஸ்டைல், எக்ஸ்கியூஸ் மி உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் யூடியூபருமான சாகில் கான், மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கினார். இந்த செயலியை விளம்பரப்படுத்தியதன் மூலம் பெரும் லாபம் ஈட்டியதாக, சாகில் கான் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சாகில் கானுக்கு கடந்தாண்டு டிசம்பரில் முதன்முதலில் சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் அவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, போலீசில் ஆஜராவதில் இருந்து தப்பித்து வந்தார். அண்மையில் இவரது முன்ஜாமீன் மனுவை அமர்வு நீதிமன்றம் நிராகரித்ததால் வேறு வழியின்றி போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் 3 மணி நேரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர், இவர் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கூறி அவரது மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. அதன் பிறகு, சாகில் கான் தலைமறைவானார்.

மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு போலீசார் சென்ற போது அவரை காணவில்லை. பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் அறிவித்தனர். பின்னர், சாகில் கான் சத்தீஸ்கரில் இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 40 மணி நேரத்திற்கும் மேலாக சத்தீஸ்கர் போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கிய மும்பை சைபர் செல் சிறப்பு புலனாய்வு குழு போலீசார், சத்தீஸ்கரில் உள்ள ஜக்தால்பூரில் வைத்து சனிக்கிழமை அன்று சாகில் கானை கைது செய்தனர். அவரை மும்பைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.